உங்களிடம் இருக்கிறதா தாழ்வு மனப்பான்மை? - விடுபட உதவும் வழிகள்

உங்களிடம் இருக்கிறதா தாழ்வு மனப்பான்மை? - விடுபட உதவும் வழிகள்

பதிவு: பிப்ரவரி 16, 2018 09:14 IST

தாழ்வு மனப்பான்மை தேவையற்றது. இது மனிதர்களை சோர்வடையச் செய்துவிடும். மேலும் அவர்களுக்குள் இருக்கும் திறமையை வெளி வராமல் தடுத்துவிடும். இதனால் அவர்களுடைய எதிர்காலம் பாதிக்கும்.

தாழ்வு மனப்பான்மைக்கு, தனிப்பட்ட காரணம் என்று எதுவும் சொல்ல முடியாது. ஒரு சிலருக்கு குடும்ப பின்னணி காரணமாக இருக்கலாம். ஏழ்மை நிலையில் உள்ள குடும்பத்திலிருந்து வந்த தன்னை யாரும் மதிக்கமாட்டார்கள் என்ற எண்ணம் தலைதூக்கிவிட்டால் தாழ்வு மனப்பான்மை வந்துவிடும். தன் செயல் களைக் கண்டு மற்றவர்கள் தன்னை குறைத்து மதிப்பிட்டுவிடுவார்களோ என்ற சிந்தனை எப்போதும் அவர்கள் மனதில் ஓடிக்கொண்டிருக்கும்.
ஒருவர் தாழ்வு மனப்பான்மையில் இருக்கிறார் என்பது தெரிந்தால் அதுவே சுற்றி இருப்பவர்களுக்கு பொழுது போக்காக மாறுவது உண்டு. அவரை சீண்டிப் பார்த்து குஷி அடைவது சிலருக்கு பிடிக்கும். சீண்டல் அதிகமாகும்போது, தாழ்வுமனப்பான்மை கொண்டவர்கள் மேலும் பாதிக்கப்படுவார்கள். தாங்கள் எதற்கும் லாயக்கு இல்லாதவர்கள் போல கருதிக் கொள்வார்கள். அதையே உண்மையாகவும் மாற்றிவிடுவார்கள். அவர்களுடைய திறமையை வளர்த்துக் கொள்ள ஆர்வம் காட்ட மாட்டார்கள்.

மனநல நிபுணர் டாக்டர் நிஷா செனாய் இது பற்றி கூறுகிறார்:

“இந்த மனநிலைக்கு ‘சோஷியல் போபியா’ என்று பெயர். சமூகத்தைப் பற்றிய பயம் இவர்களுக்கு எப்போதும் இருக்கும். தன்னை யாரும் எதுவும் தவறாக சொல்லி விடுவார்களோ என்ற அச்சம் மனதில் குடிகொண்டிருக்கும். இதன் காரணமாக, யாரிடமும் அதிகம் பேச மாட்டார்கள். மற்றவர்களிடமிருந்து ஒதுங்கியே வாழ்வார்கள்.

சமூகத்தில் ஏதோ ஒரு விஷயம் அவர்களுக்கு பொருந்தாமல் போகலாம். எங்கோ ஒரு பலவீனம் இருக்கலாம். அதையெல்லாம் பெரிய சமூக குற்றமாக கருதக்கூடாது. நம்மை நாமே சரிபடுத்திக் கொள்ளவும் மேம்படுத்திக் கொள்ளவும் எத்தனையோ வழிகள் உள்ளன. அதில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு மற்றவர்கள் பேசும் பேச்சு களுக்கு தங்கள் திறமைகளை பலி கொடுக்கக்கூடாது. இதனால் உங்களின் எதிர் காலம்தான் கேள்விக்குறியாகும். அதனால் இது கவனிக்கப்பட வேண்டும். அவர் களுக்கு மனநல ஆலோசனை அவசியம்”

தாழ்வுமனப்பான்மை கொண்டவர்களை எப்படி கண்டுபிடிப்பது?

மற்றவர்களைவிட தாங்கள் ஏதோ குறையுள்ளவர்கள்போல கருதி பெரும்பாலும் தனித்திருப்பார்கள்.

யாரையும் நேருக்கு நேர் கண்களைப் பார்த்துப் பேச மாட்டார்கள்.

ஏதோ ஒன்றை நினைத்து பயந்து போயிருப்பார்கள். அதே சூழ்நிலை வந்தால் நடுங்கிப்போய்விடுவார்கள்.

பலர் முன்பு தொடர்ச்சியாகப் பேச தடுமாறுவார்கள். அவர்கள் பேச வந்த விஷயத்தை பயம் தடுத்துவிடும்.

சின்ன சின்ன விஷயங்களைக் கூட பெரிதுபடுத்தி பேசுவார்கள். மூச்சு வாங்கும், நெற்றியில் வியர்த்துக் கொட்டும், உடல்நடுங்கும். ஏதோ ஒரு சஞ்ஜலம் விழிகளில் தென்படும். அமைதியற்ற நிலையில் இருப்பார்கள்.

ரத்த அழுத்தம் அதிகமாகும் அல்லது குறைந்துபோகும். நாலு பேர் சுற்றி நின்று கேள்வி கேட்டால், இதயம் வேகமாக படபடத்து, மயங்கியும் விடுவார்கள்.

ஏதாவது தவறு நடந்துவிட்டால் பயந்து நடுங்குவார்கள். தன்மீது ஏதாவது பழி வந்துவிடுமோ என்று எப்போதும் அஞ்சுவார்கள்.

முக்கிய பொறுப்புகளை ஏற்கத் தயங்குவார்கள்.

அலுவலக விவாதங்களில் பேசும்போது சுற்றி இருப்பவர்களை பார்த்து ஒருவித தடுமாற்றத்துடன் பேசுவார்கள்.

எந்த ஒரு விஷயத்தையும் கோர்வையாக பேசத் தெரியாது. மூளை தெளிவற்ற நிலையில் எப்போதும் குழப்பத்திலேயே இருக்கும்.

இவர்கள் எப்போதும் வேண்டாத சிந்தனைகளில் மூழ்கித் தங்களைத் தாங்களே வருத்திக் கொள்வார்கள்.


இதற்கான காரணங்கள் என்ன?

உடல் பலவீனம், ரத்த ஓட்டம் குறைவு, அனிமியா என்று சொல்லக்கூடிய ரத்தசோகை போன்றவை முக்கிய காரணம்.

குடும்ப சூழ்நிலை, குடும்ப உறுப்பினர்களின் நிந்தனை, பாதுகாப்பின்மை.

சிறுவயதில் ஏற்பட்ட ஏதோ ஒரு விபத்து அல்லது அதிர்ச்சியான சம்பவம், அதனால் ஏற்பட்ட பாதிப்பு.

வீட்டிலேயே பொத்திப் பொத்தி வளர்க்கப்படுதல். சிறுவயதிலேயே தன்னம்பிக்கையை இழக்கச்செய்தல்.

சுற்றி இருப்பவர்களின் தவறான கணிப்பு, கருத்து, சிரிப்பு, கேலி, இவர்களின் செயல்களைப் பற்றிய விமர்சனம் இதெல்லாம் இவர்களை கீழே தள்ளிவிடுகிறது.

சிலருக்கு பரம்பரை ரீதியாகவும் வருகிறது.

தன்னம்பிக்கை குறையும்போது மனம் பலவீனமடைகிறது. அப்போது தாழ்வு மனப்பான்மை உருவாகிறது.

இந்த தாழ்வு மனப்பான்மை கல்வியையும், உத்தியோகத்தையும், உடல் நலனையும் பாதிக்கும்.

சிகிச்சை

கண்டிப்பாக இவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

உளவியல் நிபுணர்கள் இவர்கள் நிலையை ஆராய்ந்து தக்க சிகிச்சையளிப்பார்கள்.

உடலில் போதுமானஅளவு ரத்தம் அதிகரிக்கவும், மனம் அமைதி பெறவும், பதற்றமின்றி உடலை சிறப்பாக இயங்கவைக்கவும் மருந்துகள் உள்ளன.

மனம் அமைதியானால், நல்ல சிந்தனைகள் தோன்றும். தன்னம்பிக்கை உருவாகும். மனம் பலம் பெறும்.

‘ரிலாக்ஷேசன்’, ‘டீப் ப்ரீத்திங்’ போன்ற பயிற்சிகள் நல்ல பலன்தரும்.

தியான பயிற்சியின் மூலம் உடலும், மனமும் அமைதி பெறும். சமூகத்தைப் பற்றிய நல்ல சிந்தனைகள் தோன்றும். சமூகத்தில் நம் பங்களிப்பு என்ன என்பதும் தெளிவு படும்.

மொத்தத்தில் நம்மைப் பற்றிய விமர்சனம் ஒரு அனுபவம். நம் தவறுகளிலிருந்து திருத்திக்கொள்ள சமூகம் கொடுக்கும் ஒரு சந்தர்ப்பம். அதைப் புரிந்து கொண்டு நம்மை நாமே மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அதைவிட்டுவிட்டு சமூகத்தை விட்டு ஒதுங்கிப் போகக்கூடாது!

Comments

Popular posts from this blog

ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது

உத்தரகோசமங்கை...

அன்னம்+காவடி+ஆட்டம்